ஜேர்மனியின் சூழல் மேம்படுத்தல் இயக்கமான Fridays for Future தமது நாட்டின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் பலவீனமானவை என்பதால் அவை எதிர்காலச் சந்ததிகளுக்குப் பயன்படாது என்று குறிப்பிட்டு நாட்டின் அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்டது போலவே அதை ஏற்றுக்கொண்டு குறிப்பிட்ட நீதிமன்றம் அவ்விரண்டு சட்டங்களும் ஒன்றுக்கொன்று நேரெதிராக இருப்பதாகச் சுட்டிக்காட்டிச் சுற்றுப்புற சூழல் பற்றிய சட்டவரிகள் தெளிவாக்கப்பட்டுப் பலப்படுத்தப்படவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது.
சுற்றுப்புற சூழல் மேம்பாட்டு ஆதரவாளர்கள் அந்தத் தீர்ப்பைத் தங்களுக்கு ஒரு வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள். தற்போது இருக்கும் சுற்றுப்புற சூழல் சட்டமானது 2030 ம் ஆண்டு வரைக்குமான கரியமிலவாயு வெளியேற்றத்தை எவ்வளவு குறைக்கவேண்டுமென்கிறது. 2031 க்குப் பின்னர் வரும் காலம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. அதனால் பின்னால் வரும் தலைமுறைகள் ஏற்கனவே நடந்தவற்றை ஏற்றுக்கொண்டு தங்கள் நிலைமையை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும். அதை மாற்றி அவர்களுடைய எதிர்காலத்துக்கும் ஏற்றபடி சட்ட வரிகள் மாற்றப்படவேண்டுமென்பதே அவர்கள் கோரிக்கையாகும்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றம் சட்ட மாற்றங்களுக்காக 2022ம் ஆண்டுக் கடைசி வரை நேரம் கொடுத்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்
