ரியூனியன் தீவுக்கு அருகே கடலில் இந்திய கப்பலில் வைரஸ் தொற்று. சிகிச்சைக்காக 4 மாலுமிகள் மீட்பு.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளபிரான்ஸின் ரியூனியன் தீவுக்கு அருகேசென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றில் இந்திய வைரஸ் திரிபு தொற்றியுள்ளது.

“பிரபு சகாவத்” (Prabhu Sakhawat) என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பலில் பதினொரு மாலுமிகள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். கப்பல் பிரான்ஸின் நிர்வாகக் கடல் பகுதியில் காணப்பட்டதால் கப்பலுக்கான அவசர மருத்துவ உதவிகளை ரியூனியன் வழங்கி உள்ளது. நோய்வாய்ப்பட்டநான்கு மாலுமிகள் மட்டும் அங்குள்ளமருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏனையோர் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ரியூனியன் பொலீஸ் தலைமையகம் ஓர் அறிக்கையில்தெரிவித்திருக்கிறது.

இந்தியக் கொடியுடன் பிறேசில் நோக்கிச்சென்றுகொண்டிருந்த அக் கப்பல் தற்சமயம் ரியூனியன் (Réunion) தீவுக்கு அருகே தரித்துள்ளது. கப்பலில் இருந்த 20 பணியாளர்களில் 11 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடையே தொற்றி இருப்பது B.1.617 எனப் பெயரிடப்படும்இந்திய வைரஸ் என்பதை ரியூனியன்பல்கலைக்கழக மருத்துவமனை உறுதிப்படுத்தி உள்ளது.

அண்மையில் பிரான்ஸின் வடக்கு நகரான லூ ஹாவ் (Le Havre) துறை முகத்திலும் கப்பல் ஒன்றில் இந்திய வைரஸ் தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தனர்.

குமாரதாஸன். பாரிஸ்.

About the author

Leave a Reply