அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்தினுள் நடந்த வன்முறைகளை ஆராய ஒரு குழு நியமிக்கப்படவிருக்கிறது.

கட்சிச் சார்பற்ற ஒரு குழுவின் மூலம் ஜனவரி 06 ம் திகதி அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களின் பின்னணி, நடத்தைகள் போன்றவை விசாரிக்கப்படவிருக்கின்றன. டெமொகிரடிக் கட்சியின் நான்ஸி பெலோசியால் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கருத்தை இரண்டு கட்சியினரும் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்களில் முக்கியமானவர்கள் உட்பட ரிபப்ளிகன் கட்சியினர் பலரும் பாராளுமன்றக் கட்டடத்தினுள் நடந்தவைகளை முழுவதுமாக ஆராய்வது நல்லது என்று கருதுகிறார்கள். செப்டம்பர் 11 இல் அமெரிக்கா தாக்கப்பட்டது பற்றிய விபரங்களை விசாரித்தது போலவே இதையும் ஆழமாக விசாரித்துத் தெரிந்து கொள்வதன் மூலம் பாராளுமன்றக் கட்டடத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்றும் நம்பப்படுகிறது. 

அந்தச் சம்பவம் பற்றிய வெவ்வேறு விசாரணைகள் வெவ்வேறு நோக்கங்களுடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் சகலத்தையும் ஒரே நோக்குடன் விசாரிக்கும் கட்சி சார்பற்ற ஒரு விசாரணை முக்கியமானது என்று எண்ணப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

About the author

Leave a Reply